search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாதத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார் ரோகித் சர்மா: மும்பையில் தீவிர பயிற்சி
    X

    5 மாதத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார் ரோகித் சர்மா: மும்பையில் தீவிர பயிற்சி

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடந்த ஐந்து மாதங்களாக விளையாடவில்லை. தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்காக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காயம் குணமடைந்ததால் உள்ளூர் தொடரான தியோதர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய ப்ளூ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர், காலில் ஏற்பட்ட காயத்தால் பின்னர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

    தற்போது அவர் முழு உடற்தகுதி பெற்று விட்டார். வருகிற 5-ந்தேதி ஐ.பி.எல். தொடர் நடைபெற இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இந்த தொடரில் தனது உடற்தகுதியை நிரூபித்து இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.



    ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    பயிற்சிக்கு தயாராகி விட்டதால் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மாவின் அதிரடி வாணவேடிக்கையை காணலாம். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை புனே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×