search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபருடன் ஒப்பீடு: விராட் கோலி புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கிளார்க் குற்றச்சாட்டு
    X

    அமெரிக்க அதிபருடன் ஒப்பீடு: விராட் கோலி புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கிளார்க் குற்றச்சாட்டு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசியது தொடர்பாக ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் குற்றம்சாட்டி உள்ளார். அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம், சிலெட்ஜிங் ஆகியவை, போட்டியை விட பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை இந்திய அணி கேப்டன் விராட் கோலியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தது.

    கோலி உலக விளையாட்டில் டிரம்பாக மாறி விட்டார் என்று செய்தி வெளியிட்டது. டிரம்பை போன்று கோலியும் தனது செயல்களை மூடி மறைக்க மீடியாக்களை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்து இருந்தது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கோலியை ஒப்பிடுவது தவறானது. ஸ்டீவன் சுமித்தை விட கோலி என்ன செய்துவிட்டார். எதையும் மனதில் வைத்து பேச வேண்டும்.

    விராட் கோலியை எனக்கு பிடிக்கும். ஆஸ்திரேலிய மக்களும் அவரை நேசிக்கிறார்கள். அவர் சவால்களை ஏற்றுக் கொண்டு செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டு அல்லது மூன்று ஆஸ்திரேலிய நிருபர்கள் விராட் கோலியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் இதுபற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. இதேபோல ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதுவதை சுமித்தும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

    2005-ல் ஆசஷ் டெஸ்ட் தொடரின்போது ஒவ்வொரு டெஸ்டும் வீரர்களுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலை இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே இரு அணி வீரர்களும் நட்புடன் இருந்தோம். தற்போதைய டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் அவ்வாறு முடிவு செய்கிறது.

    விராட் கோலி ஒரு கடினமான வீரர். நம்பர் ஒன் வீரராக இருக்க வேண்டுமானால் அதுபோன்றுதான் இருக்க முடியும். தர்மசாலாவில் அவர் சதத்துடன் மிகப்பெரிய ரன் குவித்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும்.

    விராட் கோலி ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்யும் போது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா போட்டியிலும் அவர் சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.



    தர்மசாலாவில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். ‘டாஸ்’ வெல்லும் அணி வெற்றி பெறும் என்று கருதுகிறேன்.

    மைதானம் ஈரப்பதம் காணப்பட்டால் இந்திய அணி சிரமத்தை சந்திக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 முதல் 450 ரன்களை குவிக்க முடியும்.

    இவ்வாறு கிளார்க் கூறினார்.
    Next Story
    ×