search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி டெஸ்ட்: இந்திய அணிக்கு 103 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    மொகாலி டெஸ்ட்: இந்திய அணிக்கு 103 ரன்கள் வெற்றி இலக்கு

    மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 103 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்கள் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 417 ரன்கள் குவித்தது.

    134 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 36 ரன்னுடனும், கரேத் பேட்டி 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பேட்டி ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த பட்லர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜயந்த் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி இன்று காலை விரைவாக இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹமீத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஜோ ரூட் அரைசதம் கடந்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    கிறிஸ் வோக்ஸ் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஹமீத் அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் 5 ரன்னில் ரன்அவுட் ஆக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஹமீத் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    முதல் இன்னிங்சில் 134 ரன்கள் பின்தங்கி இருந்ததால் 2-வது இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 102 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது இங்கிலாந்து. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 102 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.



    103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் பார்தீப் பட்டேல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் ரன்ஏதும் எடுக்காமல் வோக்ஸ் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.



    அடுத்து புஜாரா களம் இறங்கினார். 6 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருக்கும்போது மதிய தேனீர் இடைவேளை விடப்பட்டது. பட்டேல் 16 ரன்னுடனும், புஜாரா 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×