search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மணிரத்னம் டைரக்ஷனில் இதயக்கோயில்
    X

    மணிரத்னம் டைரக்ஷனில் இதயக்கோயில்

    வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.
    வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.

    ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.

    எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

    17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.

    தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது.

    இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர்.

    இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-

    "இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை.

    ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.

    கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது.

    இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.

    இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.

    இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.

    இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.

    இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.

    சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.

    "கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

    இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

    அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.

    இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.

    இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான்.

    இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது.

    இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''

    இவ்வாறு கோவைத்தம்பி கூறினார். 
    Next Story
    ×