பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்த மருத்துவ மொழி.
சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது.
கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகளும் உண்டு.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து தோலுரித்த 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
அதனுடன் மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்பு இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்துவந்தால் நெஞ்சுச்சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு விலகும்.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும்.
முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.
பல்வலி, சொத்தைப்பல், ஈறுவலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.