

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்று எக்ஸ் (முன்னதாக டுவிட்டர்). உலகளவில் கோடி கணக்கானோர் பயன்படுத்தி வரும் எக்ஸ் தளம் அவ்வப்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு முடங்கிப் போவது வழக்கமான ஒன்றுதான். எக்ஸ் மட்டுமின்றி உலகின் முன்னணி சமூக வலைத்தளங்கள் மற்றும் தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனங்கள் என மென்பொருள் துறையில், சேவை முடக்கம் சாதாரண விஷயமாக மாறி வருகிறது.
இந்த வரிசையில், எக்ஸ் தளம் இன்றிரவு 8.30 மணி (இந்திய நேரப்படி) முதல் முடங்கியுள்ளது. எக்ஸ் தளம் முடங்கியதை டவுன்டிடெக்டர் (downdetector) உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் சேவை முடக்கம் பற்றிய விவரங்களை டவுன்டிடெக்டர் வழங்கி வருகிறது. அதன்படி டவுன்டிடெக்டர் தளத்தில் கடந்த சில மணி நேரத்தில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என பலர் முறையிட்டுள்ளனர்.
தளம் திடீரென முடங்கியதை அடுத்து பயனர்களால் எக்ஸ் தளம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. தற்போதைய தகவல்களின் படி எக்ஸ் தளம் இந்தியாவில் மட்டும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.