

இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுவதை 5 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏஐ கருவியை உருவாக்கியுள்ளனர்.
எப்படி செயல்படுகிறது?
இதய தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் CT ஸ்கேனில் கூட புலப்படாது.
ஆனால் இந்த AI கருவி இதயத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் நுணுக்கமாக கண்காணித்து, நோயாளிக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டு Risk Score வழங்குகிறது.
இந்த ஏஐ மென்பொருளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் CT ஸ்கேன்களுடன் இணைத்தால் போதுமானது.
இங்கிலாந்தின் 9 மருத்துவமனைகளில் சுமார் 72,000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த கருவி 86% துல்லியமாக முடிவுகளை வழங்கியுள்ளது.
ஏஐ கருவி வழங்கும் Risk Score-ல் 'அதிக ஆபத்து' பிரிவில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது இந்தத் தொழில்நுட்பத்தை மருத்துவமனைகளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும்போது, உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்காமலும், முறையான உடற்பயிற்சி இல்லாமலும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது உள்ளிட்டவற்றாலும் இதய செயலிழப்பு அபாயம் ஏற்படுகிறது.
அதேநேரம் அண்மைக் காலங்களாக இளவயதினரிடத்திலும் திடீர் இதய செயலிழப்பு ஏற்படுவது கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.