search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singaravelan"

    • தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விமல் - சிங்காரவேலன்

    விமல் - சிங்காரவேலன்

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார்.

    விமல்

    விமல்

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், இல்லை என்றால் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் `களவாணி 2' படத்திற்கு நீதிமன்றம் முதலில் தடை விதித்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்கியுள்ளது. #Kalavani2 #Vemal
    நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

    இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.



    இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சற்குணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்ளி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, களவாணி 2 திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். #Kalavani2 #Vemal
    விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி 2’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

    இந்த நிலையில் விநியோகஸ்தரும். தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப் பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி 2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

    ‘விமல் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.



    இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும், இல்லை என்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார். நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

    சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் ‘களவாணி 2’ படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நானும் அதற்கு ஒப்புக் கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17-ந் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

    இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இந்தநிலையில் தான் ‘களவாணி 2’ படம் வர்மன்ஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.



    நான் இயக்குநர் சற்குணத்திடமும். விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும். ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்துக்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிடக் கூடாது என ஆறு வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

    நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது’.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam #Singaravelan

    ×