search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC ST Act"

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது. #SCSTAct #SC
    புதுடெல்லி:

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

    வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது.


     
    இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேசமயம் உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 25-ம் தேதி இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, விரைவில் அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து தனி அமர்வில் விசாரிப்பதற்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், எஸ்சி,எஸ்டி சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், தடை விதிக்க மீண்டும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    மேலும், மத்திய அரசின் சீராய்வு மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #SCSTAct #SC
     
    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

    அந்தவகையில் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28.4 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவீத வழக்குகளிலும், 2016-ம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவீத வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சியம் இல்லாமை, இருக்கும் சாட்சியங்களும் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    ×