search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kevin Mccarthy"

    • அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 2,71,36,50,08,00,00,000.00
    • ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக மெக்கார்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது

    அமெரிக்காவில் செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு கட்சி ஜனநாயக முறையை கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயகத்தில் குடியரசு (Republic) கட்சியும், ஜனநாயக (Democratic) கட்சியும் இரு பெரும் கட்சிகள்.

    அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 271365008,00,00,000.00 ($32.6 ட்ரில்லியன்) எனும் அளவில் இருந்தது. அந்நாட்டில் மத்திய அரசாங்கத்தின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில், செலவினங்களுக்கான உச்சவரம்பை உயர்த்தினால்தான் அரசாங்கம் இயங்கும் எனும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து திவால் நிலையிலிருந்து அமெரிக்காவை காக்க செலவினங்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது குடியரசு கட்சியின் ஒப்புதலும் தேவைப்பட்டதால், நீண்ட விவாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் இதற்கான சம்மதம் பெறப்பட்டது.

    இந்த விவாதங்களின் போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் அவருக்கெதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகளுடன் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியினரே வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2009-லிருந்து 2017 வரை உதவி ஜனாதிபதியாக பைடன் பதவி வகித்தார்
    • பரிஸ்மா எனும் உக்ரைன் நிறுவனம் மூலம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர்

    ஆட்சியமைப்பிலும், நீதித்துறையிலும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை உடனடியாக ஒரு உத்தரவின் மூலம் பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

    இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும்.

    இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.

    உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) செய்து வரும் பல தொழில்களிலிருந்து, குறிப்பாக உக்ரைன் நாட்டின் பரிஸ்மா (Burisma) எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

    அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ($20 மில்லியன்) அளவிற்கு பைடன் குடும்பத்தினர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை எந்த நேரடி ஆவணங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதற்கான கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் (James Comer) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக ஜோ பைடன் மீது சுமத்தி வருகிறார்.

    இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இந்திய ஜனாதிபதி ஆகியோர் இம்பீச்மென்ட் முறையில்தான் பதவியிலிருந்து நீக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசு கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார்.
    • அக்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது.

    இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றம் கூடியது. பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    இதில் குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் களம் இறங்கினார்.

    சபாநாயகரை தேர்வு செய்ய 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குடியரசு கட்சிக்கு 222 உறுப்பினர்கள் இருப்பதால் கெவின் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் பாராளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது அமெரிக்காவில் இது முதல்முறை ஆகும்.

    கடந்த 3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு நடத்தியபோதும் சபாநாயகரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பிரதிநிதிகள் சபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

    ×