என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing World Championship"

    • இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
    • உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது.

    உலக கோப்பை குத்துச்சண்டை (World Boxing Cup) உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் மொத்தம் 38 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 10 எடை பிரிவுகளில் (weight categories) நடைபெற்றது.

    இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடமும் இங்கிலாந்து 2 தங்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. மற்ற நாடுகள் (ஆஸ்திரேலியா, ஜப்பான், சீன தைபே, கஜகஸ்தான், போலந்து) தலா 1 தங்கம் வென்றன.

    இந்நிலையில் உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரில் 20 பதக்கங்களை வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எதிர்காலத்திலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க உங்களை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச்-ம், 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் குலியாவும் தங்கம் வென்றனர்.
    • பெண்களுக்கான குத்துசண்டை போட்டியில் 7 வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

    டெல்லி:

    உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த பந்தயங்களில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டு அசத்தினர்.

    பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி, ஆசிய சாம்பியனான பார்சோனா போஜிலோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே எதிராளிக்கு சரமாரியாக குத்துகளை விட்டு மிரட்டிய மீனாட்சி 5-0 என்ற கணக்கில் போஜிலோவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

    54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி 5-0 என்ற கணக்கில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவரான சிரின் சராபியை (இத்தாலி) சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    70 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் இளையோர் உலக சாம்பியனான இந்தியாவின் அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் இந்தியாவின் நுபுர் பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோதிம்போவா ஒல்டினாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

    51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை தெறிக்கவிட்டு தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

    இதேபோல் நடப்பு உலக சாம்பியனான ஜாய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) சீன தைபேயின் வு ஷி யியை பந்தாடி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

    60 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடாவை தங்கப்பதக்கம் அலங்கரித்தது. அதே சமயம் பூஜா ராணி (80 கிலோ) இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஜதுமணி சிங் 1-4 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜாலிலோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    இதே மாதிரி 55 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் பவன் பார்த்வால், உஸ்பெகிஸ்தானின் சமந்தர் ஆலிகோவிடம் தோல்வி கண்டார். 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபினாஷ் ஜம்வால் 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் ஷின் நிஷியமாவிடம் வீழ்ந்தார்.

    80 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அங்குஷ் பன்ஹால், உலகக் கோப்பை சாம்பியனான ஷித்து ஒலாடிமிஜியிடம் (இங்கிலாந்து) பணிந்தார். மற்றொரு இந்தியர் நரேந்தர் பர்வாலும் (90 கிலோவுக்கு மேல்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் செய்த்பிக் முனார்பெக்கையும், 70 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 3-2 என்ற கணக்கில் முர்செல் நுர்பெக்கையும் (கஜகஸ்தான்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

    • இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கம் வென்றுள்ளது. இன்று 50 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த நிகுயென்னை 5-0 என வீழ்த்தினார்.

    நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார். இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.

    மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோமுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம், 6 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் லவ்லினாவும் ஒருவர்.
    • தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் லவ்லினா. குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

    தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார். மேலும், உலக போட்டிகளில் இரண்டு வெண்கலமும், ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலமும் பெற்றிருந்த நிலையில், தங்கம் வெல்ல மிகவும் கடினமாக உழைத்ததாக தெரிவித்தார். 

    ×