search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bilateral relations"

    • டிரம்ப், தனது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 25 சதவீத இறக்குமதி விதித்திருந்தார்
    • என் பதவிக்காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தது என்றார் டிரம்ப்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.

    இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார்.

    உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.


    இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:

    தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது.

    ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.

    3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு "அதிக முன்னுரிமை தரப்படும் நாடு" (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விசா வழங்கலை இந்தியா நிறுத்தியது

    கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கனடா நாட்டின் வேன்கூவர் (Vancouver) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, செப்டம்பர் 18 அன்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததுடன், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

    இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைய ஆரம்பித்தது.

    இந்தியாவிற்கான கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.


    இரு தரப்பிலும் சுமூகமான உறவு ஏற்பட உயர் அதிகாரிகள் தரப்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் 2024ல் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு அமையும் என அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
    • தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்

    இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).

    கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

    இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.

    பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.

    இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:

    இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.

    இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.

    • இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
    • ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

    2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.

    இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

    தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.

    "இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.

    அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.

    மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.

    இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.

    இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை. 

    ×