search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture graduates"

    • ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வரும் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    அரியலூர்:

    மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

    அரியலூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஊராட்சிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ஒரு லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம்.

    எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் வரும் 31-ந் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

    திருப்பூர் :

    வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடபாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 68 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதனம் மானியம் வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் அமைக்க வேண்டும். பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு தனியார் நிறுவனங்களில் பணிகளில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும்.

    தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையை கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற 25-ந் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களையும் அல்லது வேளாண் துணை இயக்குனரை 94875 61146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×