

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டியில், கோல் ஏதும் அடிக்கப்படாததால், சுவிட்சர்லாந்தும் கொலம்பியாவும் கூடுதல் நேரத்திற்கு முன்னேறின.
இரு அணிகளும் தலா 15 நிமிடங்கள் கொண்ட இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 30 நிமிட கூடுதல் நேரத்தில் விளையாடின. கூடுதல் நேரத்திற்குப் பிறகும் கோல் கணக்கு சமமாக இருந்ததால், காலிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் நடைபெற்றது.
பெனால்டி ஷூட்அவுட்:
பெரும் பரபரப்பாக தொடங்கிய பெனால்டி ஷூட்அவுட்டின் முதல் முயற்சியில் சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பியா அணிகள் கோல் அடித்தன.
அடுத்த முயற்சியில் சுவிட்சர்லாந்து கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. மூன்றாவது முயற்சியில் கொலம்பியா மட்டும் கோல் அடிக்க ஆட்டம் 2-2 மீண்டும் சமநிலைக்கு வந்தது.
இதேபோல் நான்காவது முயற்சியில் சுவிட்சர்லாந்து மட்டும் கோல் அடிக்க அந்த அணி 3-2 என முன்னிலை பெற்றது. கடைசி முயற்சியில் இரு அணிகளும் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து 4-3 கணக்கில் வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா:
இந்த வெற்றியை தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணி, அடுத்ததாக சனிக்கிழமை அன்று மிசோரியின் கேன்சஸ் சிட்டியில் உள்ள ஆரோஹெட் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும். முன்னதாக, அர்ஜென்டினா அணி எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
1954-இல் உலகக் கோப்பையை நடத்தியதில் இருந்து சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியதில்லை. மேலும், திங்களன்று பயிற்சியின்போது காயமடைந்த இளம் நடுக்கள வீரர் ஜோஹன் மன்சாம்பி இல்லாமல், செவ்வாயன்று சுவிஸ் அணி குறைவான வீரர்களுடன் விளையாடியது.
2014 உலகக் கோப்பையில் கொலம்பியா காலிறுதிக்கு முன்னேறியது, ஆனால் போட்டியை நடத்திய பிரேசிலிடம் தோல்வியடைந்தது.