

மும்பை:
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா வீரராக களமிறங்குவாரா அல்லது இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் அவர் 'இம்பேக்ட் பிளேயர்' விதியின் கீழ் பயன்படுத்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்நி்லையில் இந்த ஆண்டு, நான் முடிந்தவரை அவரை களத்தில் அதிக நேரம் வைத்திருக்கவே விரும்புகிறேன் என அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ரோகித்தை நிர்வகித்தோம். அவருக்கு சில சிறிய உபாதைகள் இருந்ததால், கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணியில் தொடர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
நிச்சயமாக இந்த ஆண்டு, நான் முடிந்தவரை அவரை களத்தில் அதிக நேரம் வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால், பந்துவீச்சாளர்களை சுழற்றுவதிலோ அல்லது இம்பேக்ட் பிளேயர் எந்த நேரத்தில் களத்திற்கு வருகிறார் என்பதிலோ, அனைத்து வீரர்களும் களத்தில் இருக்க வேண்டுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது எங்கள் அணியில் ஆல்-ரவுண்டர்களாக இல்லாதவர்கள் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே. எதிரணிக்கு ஏற்ப கேப்டனுக்கு பந்துவீச்சு வாய்ப்பு தேவைப்பட்டால், அதை நாங்கள் நிச்சயம் விவாதிக்க வேண்டும். இந்த விசயத்தில் முடிவெடுக்க நீங்கள் எனக்கு உதவ முடியுமா? என்று செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக கேட்டார்.