#LegalAction | பெண் ஊழியரிடம் அத்துமீறல் - கொந்தளித்த பாக். வீரர் சொன்னது என்ன?

சரிபார்க்கப்படாத எந்த செய்தியையும் ஒளிபரப்ப முடியாது. அரசு அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#LegalAction | பெண் ஊழியரிடம் அத்துமீறல் - கொந்தளித்த பாக். வீரர் சொன்னது என்ன?
Published on

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். கண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) அந்தக் குற்றச்சாட்டுகளை வீரரின் பெயரை குறிப்பிடாமல் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், மிர்சா சமூக வலைத்தளத்தில் தனது பெயரை பாதுகாக்கும் நோக்கில், தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், அந்த செயல் "மலிவான பத்திரிகை" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த பதிவில் அவர், "ஒரு அபத்தமான செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது, இந்த வகையான மலிவான பத்திரிகையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். எந்த ஊடக நிறுவனமும் சரிபார்க்கப்படாத எந்த செய்தியையும் ஒளிபரப்ப முடியாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே இந்த ஆதாரமற்ற மற்றும் போலி செய்தியை மறுத்துள்ளது, மேலும் ARY News-இல் பணிபுரியும் #ShahidHashmi (பத்திரிகையாளர்) மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த வகையான மோசமான செய்திகளை தடை செய்ய வேண்டும், மேலும் பாகிஸ்தான் அரசு அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்."

முன்னதாக இது தொடர்பான செய்தி வெளியான போதே, அந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என்று மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சம்பந்தப்பட்ட செய்தியாளர் இந்த விஷயத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com