சேப்பாக்கம் டெஸ்ட்: இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் திணறல்- 112/8

பும்ரா 3 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார்.அர்ஷ் தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சேப்பாக்கம் டெஸ்ட்: இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் திணறல்- 112/8
Published on

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ் தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்திருந்தது. ஷன்டோ 15 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் மேலும் 4 ரன்கள் அடித்து 8 ரன்னில் ஆட்டிழந்தார். அதேவேளையில் ஷன்டோ 20 ரன்கள் எடுத்த நிழைலயில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் 40 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வங்கதேச அணியின் ஸ்கோர் 91 ரன்னாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. லிட்டன் தாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடனேயே, வங்கதேச ஸ்கோர் 92 ஆக இருந்தபோது ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விழுந்தார்.

இதனால் வங்கதேசம் 2-வது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மெஹிது ஹசன் மிராஸ் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், அர்ஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com