

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 வயதான ராகுல், பேட்டிங்குடன் சேர்த்து விக்கெட் கீப்பர் பணியையும் கவனிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2025 சீசனில் ராகுல் பெரும்பாலும் 4-வது வரிசையில் விளையாடினார். ஆனால், அணியின் மற்ற தொடக்க வீரர்கள் சரியாக ஆடாத காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்க டெல்லி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2025 சீசனில் ராகுல் டெல்லி அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 539 ரன்கள் குவித்து அந்த அணியின் அதிக ரன் குவித்த வீரராகத் திகழ்ந்தார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த 112 ரன்கள் குறிப்பிடத்தக்கது.
அக்சர் படேல் அணியின் கேப்டனாகத் தொடரும் நிலையில், ராகுல் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். அவருக்குத் துணையாக பென் டக்கெட் அல்லது பதும் நிசாங்கா தொடக்க வரிசையில் இணைய வாய்ப்புள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.