சி.எஸ்.கே. உத்வேகம் இலங்கைக்கு உதவியது- கேப்டன் தசுன் ஷனகா

ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.
சி.எஸ்.கே. உத்வேகம் இலங்கைக்கு உதவியது- கேப்டன் தசுன் ஷனகா
Published on

துபாய்:

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது.

துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

பனுகா ராஜபக்சே 45 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹசரங்கா 21 ந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம்ஷா, ஷதாப்கான், இப்தி கார் அகமது தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 147 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இலங்கை 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

முகமது ரிஸ்வான் 49 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), இப்தி கார் அகமது 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். லியன்கமகே 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் கருணாரத்னே 2 விக்கெட்டும், தீக்‌ஷனா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது-

2021-ம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி கோப்பையை வென்றது. சி.எஸ்.கே. முதலில் ஆடி இந்த வெற்றியை பெற்றது. இது எனது மனதில் இருந்தது. இதுபற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது.

ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அவர்களுக்கு நான் கண்டிப்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com