திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் மகாசண்டி யாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை என சிறப்பு பூஜைகள் நடந்தன. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் மகாசண்டி யாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு குன்றுமுலைக்குமரி எனப்படும் கிரிகுஜாம்பிகை மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியாக அருள்பாலிக்கிறார்.

கடந்த தை மாதம் 1-ந் தேதி புணுகு தைலம் சாற்றப்பட்டதை தொடர்ந்து திரை மறைவில் உள்ள அம்பாளின் முகத்தை மட்டுமே பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிலில் சண்டி மகாயாகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மகாசண்டி யாக விக்னேஸ்வர பூஜை, சண்டியாக சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணி முதல் கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை என சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பட்டு அம்பாள் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து தயிர் பள்ளயம் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சண்டி மகா யாக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் சங்கர் குருக்கள், இ.பி. உப்பிலி சீனிவாசன் மற்றும் நவசண்டி மகா யாக சேவா சங்கம், கிரிகுஜாம்பிகை பவுர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com