43 டன் எடை கொண்ட தஞ்சை பெரிய கோவில் தேர்

தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடை கொண்டது.
43 டன் எடை கொண்ட தஞ்சை பெரிய கோவில் தேர்
Published on

தஞ்சை பெரியகோவில் தேர் 19 அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டது. மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டது. முதல் அடுக்கில் 1½ அடியில் 40 பொம்மைகளும், 2-ம் அடுக்கில் 2½ அடியில் 56 பொம்மைகளும், 3-ம் அடுக்கில் 1½ அடியில் 56 பொம்மைகள் உள்பட மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் 4 திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பொம்மைகள் சிவன் கோவிலுக்கு ஏற்ற ஐதீக அடிப்படையிலும், தஞ்சையில் புகழ்பெற்ற சிற்பங்களையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சாதாரணமாக 40 டன் ஆகும். தேர் அலங்காரத்திற்கு பின் 43 டன் எடையாகும்.

தஞ்சை பெரியகோவில் தேர் 14 இடங்களில் நின்று செல்லும்

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பெரியகோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தொடங்குகிறது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகள் அலங்கார சப்பரத்திலும், தியாகராஜருடன் அம்மன் திருத்தேரிலும், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார சப்பரத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக 4 ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதியில் வலம் வருகிறது.

4 ராஜவீதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் 14 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. மேலராஜவீதியில் சந்துமாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும், வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில் (ராணி-வாய்க்கால் சந்து எதிரில்), ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்), குருகுலசஞ்சீவி கோவில் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது. கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை (மாரியம்மன் கோவில் அருகில்), விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்), மணிகர்ணிகேஸ்வரர் கோவில் (தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை அருகில்), வரதராஜ பெருமாள் கோவில் (நிக்கல்சன் கூட்டுறவு வங்கி எதிரில்), தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கமலரத்ன விநாயகர் கோவில் (கனரா வங்கி அருகில்), காசி விஸ்வநாதர் கோவில் (இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com