திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்?: ஸ்தபதி ஆய்வு

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சக்கரங்களாக இருந்த இந்த தேரை பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மூலமாக இரும்பு சக்கரங்களையும் இரும்பு அச்சையும் செய்து கொடுத்தார்.
பூம்புகார் நிறுவனத்தில் இருந்து ஸ்தபதி வேலாயுதம் பார்வையிட்ட போது எடுத்த படம்.
பூம்புகார் நிறுவனத்தில் இருந்து ஸ்தபதி வேலாயுதம் பார்வையிட்ட போது எடுத்த படம்.
Published on

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் விநாயகர் தேரோட்டம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேர் புதுப்பிக்கப்பட்டு ஓட்டி வரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சக்கரங்களாக இருந்த இந்த தேரை பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மூலமாக இரும்பு சக்கரங்களையும் இரும்பு அச்சையும் செய்து கொடுத்தார். தற்போது 2 மர சக்கரங்கள் நான்கு இரும்பு சக்கரங்களுடன் இந்த தேர் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் தேர் சுமார் 21 அடி உயரமும், 21 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டதாகும்.

தேரின் வடிவம் தாமரைப்பூ வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர் தேக்கு, இலுப்பை, வேங்கை, சோம்பு மரங்களை கொண்டு உருவாக்குவது வழக்கம். அதிகமாக இலுப்பை மரம் தேர்களில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை மரம் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும் என்பதால் இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேரின் உள்பகுதி சிறு விரிசல்கள் உள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் தேரை செப்பனிட அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. சில காரணங்களால் அந்த திட்ட அறிக்கை அளவில் நின்று விட்டது.

இந்த தேரில் எந்த வகையான குறைபாடுகள் உள்ளன? எங்கெங்கு உள்ளன? என்பது குறித்தும் தேரில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதா? அல்லது புதிய தேர் வடிவமைப்பதா? என்பது குறித்து அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனத்தில் இருந்து ஸ்தபதி வேலாயுதம் நேற்று பார்வையிட்டார். அவர் இதற்கான செலவீனங்கள் எவ்வளவு ஆகும் என்பது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த ஆய்வின்போது அறநிலையத்துறை கண்காணிப்பாளர் இந்திரா மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் ஊழியர்கள் திருச்செங்கோடு அறநிலையத்துறை ஊழியர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com