ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா

சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன.இரவில் சுவாமிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது.
ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா
Published on

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா நடைபெறுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆனி பெருங்கொடை விழா கடந்த 17-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் சுவாமிக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது.

விழாவின் சிகர நாளான நேற்று ஆனி பெருங்கொடை விழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவில் சுவாமிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

விழாவையொட்டி வாணவேடிக்கை, வில்லிசை, கரகாட்டம், கொம்புதப்பு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் வடக்கு விஜயநாராயணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், கோவில் ஆய்வாளர் கார்த்திகேஷ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரி, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவகுமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com