

பழனிக்கு வரும் பக்தர்கள் மலை மீது அருள்பாலிக்கும் ஞான தண்டாயுதபாணி சுவாமியை வணங்கி செல்கின்றனர். ஆனால் மலை மீது ஏறி சென்று வழிபட்டால் தான் நற்பயன் கிடைக்கும் என்று அல்லாமல், மலையை வலம் வந்து வணங்கினாலே பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றான் முருகன். இதை, 'பைங்கயிலை போலும் பழனியே' என்று மாம்பழ கவிசிங்கரும், 'காசியின் மீறிய பழனி' என்ற அருணகிரிநாதரின் பாடல்வரி மூலம் அறியலாம்.
தமிழகத்தில் கிரிவலத்துக்கு பெயர் பெற்றது அய்யன் அருள்கொண்ட திருவண்ணாமலை. அதற்கு அடுத்ததாக பழனியிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக மலையை சுற்றிய பாதைகளில் காவடி, அலகு குத்தி வரும் பக்தர்கள் கிரிவலம் வந்த பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.
பழனி மலையை சுற்றிய பகுதியில் கடம்ப மரங்கள் அதிகமாக உள்ளதால் காலை, மாலை வேளையில் கிரிவலம் செல்லும்போது வீசும் காற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. சூரிய பகவான் வெம்மையால் வாட்டும் நாளில் மக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் பழனியில் பங்குனி மாத கடைசி 7 நாட்கள், சித்திரை முதல் 7 நாட்கள் பழனி மலையை கிரிவலம் வருவது அக்னி நட்சத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.