நவராத்திரி: சிவன், அம்மன் கோவில்களில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம்

கனக துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், நெய் விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.
நவராத்திரி: சிவன், அம்மன் கோவில்களில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம்
Published on

சித்தூர், திருப்பதி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலின் துணைக்கோவிலான காணிப்பாக்கம் மரகதாம்பிகை சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. அதையொட்டி அம்மனுக்கு நேற்று காயத்ரி தேவி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப்பூஜைகள், குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது.

சுருட்டப்பள்ளி சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு நவராத்திரி சிறப்புப்பூஜைகள் நடந்தது. ேநற்று முன்தினம் அம்பாள், மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரியையொட்டி ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் கொலு பொம்மை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை கவரும் வகையில் இருந்தது. நேற்று ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்கந்தமாதாதேவி அலங்காரத்திலும், சிவன் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன், லலிதாதேவி அலங்காரத்திலும், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் துணைக்கோவிலான பொன்னாலம்மன், ஸ்கந்தமாதா அலங்காரத்திலும், ஏழுகங்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன், ஸ்கந்தமாதாதேவி அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கனகாசலம் மலை மீதுள்ள கனக துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், நெய் விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com