நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அஷ்டமி

மூலவர், உற்சவர் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு செண்பகவல்லி தாயார், ஜெகன்நாத பெருமாளை வழிபட்டனர்.
யாகம் நடந்தபோது எடுத்தபடம்.
யாகம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவிலில் ஜெகன்நாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் ஒன்றாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் திகழும் இக்கோவில் நந்திபுரவிண்ணகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் செண்பகவல்லி தாயாருடன் ஜெகன்நாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து 8 வளர்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து, 8-வது அஷ்டமி அன்று திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி திதியில் சுக்ல பட்ச அஷ்டமி யாகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு நேற்று முன்தினம் வளர்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சுக்லபட்ச அஷ்டமி சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் 108 வகையான பொருட்களால் பூர்ணாகுதியும், சிறப்பு மகாதீபாராதனை செய்யப்பட்டு, புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மூலவர், உற்சவர் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு செண்பகவல்லி தாயார் மற்றும் ஜெகன்நாத பெருமாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெகன்நாத பெருமாள் கைங்கர்ய சபையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com