தை திருவிழா: நாகராஜா கோவிலில் சாமிக்கு ஆராட்டு

திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது.
தெப்பக்குளத்தில் சாமிக்கு ஆராட்டு நடந்த போது எடுத்த படம்.
தெப்பக்குளத்தில் சாமிக்கு ஆராட்டு நடந்த போது எடுத்த படம்.
Published on

தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடி நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com