மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.6 கோடியில் ராஜகோபுர திருப்பணி

6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது.2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது.
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜகோபுர திருப்பணிகள்.
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜகோபுர திருப்பணிகள்.
Published on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் திருத்தலங்களில் பிரசித்திபெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு கோவில் நிதியில் இருந்து ரூ.2½ கோடியில் ஏழுநிலை ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கியது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் நன்கொடையாளர்களை சந்தித்து திருப்பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நன்கொடையாக ரூ.6 கோடி நிதியை வழங்கிட முன்வந்தனர்.

இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறையும் ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கு நன்கொடை அளிக்க உபயதாரர்கள் முன்வந்ததால், 6 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்க உள்ளது. ரூ.6 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com