மாசி மக திருவிழா: கும்பகோணம் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில்களில் மாசிமக திருவிழா நடந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தபோது எடுத்தபடம்.
63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தபோது எடுத்தபடம்.
Published on

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா விமரிசையாக நடைபெறும். மாசி மகத்தன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். மாசி மக திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடைபெறும்.

அதன்படி கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் கடந்த 25-ந் தேதி மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் கும்பகோணம் பகுதியில் உள்ள வைணவ கோவில்களில் கடந்த 26-ந் தேதி மாசிமக திருவிழா கொடியேற்றம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெறும் தெப்ப உற்சவத்தையொட்டி சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. கும்பகோணம் நகர பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் மாசிமக திருவிழா நடந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கும்பகோணம் நகரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்று வரும் பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் நகர் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் ஏராளமானோர் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட படிச்சட்டங்களில் 63 நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர் கோவில் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடியபடி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com