

நேற்று முன்தினம் மாலை முருகன், வெள்ளி குதிரை வாகனத்தில் தனது மாமன் பெருமாள் வசிக்கும் ஊரான விராலூருக்கு எழுந்தருளினார். அங்கு மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது.
அதனை தொடர்ந்து நேற்று விராலூரில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 10 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் பாண்டியராஜ், விராலிமலை தாசில்தார் செல்வவிநாயகம், அட்மா சேர்மன் பழனியாண்டி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
செண்டைமேளம், வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்க அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் முருகன், வள்ளி, தெய்வானைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து தேர் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. விராலிமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.