

பங்குனி மாதத்தில் ஊர் தோறும் அம்பிகையின் ஆலயங்களில், பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள மலர்களையும், வண்ண வண்ண பூக்களையும் கூடைகளில் கொண்டு வந்து, அம்பிகையின் மீது தூவி பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.
அம்பிகையின் மீது தூவி வழிபடப் படுவதால் இதற்கு ‘பூச்சொரிதல்’ என்று பெயர். இந்த பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு, அம்பிகையை வழிபாடு செய்வதால், நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. தேனைச் சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும் பொழுது, தேனான வாழ்க்கை நமக்கு அமையும்.
அதைச் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லும் பொழுது, ‘ஓம்சக்தி’ என்று உச்சரிப்பதால், நாம் சிறப்பான பலன்களைப் பெறுகிறோம். அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழை வளம் பெருகும். “மாரியல்லால் ஒரு காரியமில்லை” என்ற பழமொழிப்படி, மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர் தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழி காண்போம்.