புள்ளம்பாடியில் புனித அன்னாள் ஆலய தேர்பவனி

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதில் திருவையாறு பங்குத்தந்தை டோனிசாட்ச் திருத்தேரினை புனிதப்படுத்தி, வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடியில் புனித அன்னாள் ஆலய தேர்பவனி
Published on

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரகாலூர் பங்குத்தந்தை அந்தோணிசாமி மற்றும் சுற்று வட்டார அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

தினமும் மாலை நடைபெற்ற திருப்பலியில், புள்ளம்பாடி சகாயமாதா ஆலய அருட்தந்தை கஸ்பார், வடுகர்பேட்டை தங்கசாமி உள்பட பல்வேறு அருட்தந்தையர்களால் கூட்டுப்பாடற் திருப்பலி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 சப்பரங்களின் பவனியை குடந்தை மறை மாவட்ட கல்வி இயக்குனர் தந்தை ஜோமிக் சாவியோ புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார்.

நேற்று முன்தினம் மாலை ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திருவையாறு பங்குத்தந்தை டோனிசாட்ச் திருத்தேரினை புனிதப்படுத்தி, வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேரில் அலங்கரிக்கப்பட்ட அன்னாள்மேரி சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து இரவில் ஆலயம் வந்தடைந்தது.

விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை புனித அன்னாள் ஆலய அதிபர் ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்கு தந்தை அமலதாஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அருட் சகோதரிகள், பங்கு இளைஞர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com