கன்னியாகுமரி பகவதி அம்மன், வெங்கடாசலபதி கோவில்களில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

கன்னியாகுமரி பகவதி அம்மன், வெங்கடாசலபதி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
Published on

கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து கடந்த 1-ந்தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பகவதி அம்மன் கோவில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும், அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலை 7 மணிக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். 9.45 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும், அப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு தடை செய்யப்படும். தொடர்ந்து 10.15 மணி முதல் 11.15 மணி வரையும், 11.45 முதல், 12.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.

மாலை 4 மணி முதல் 6.15 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். பின்னர், 6.45 மணி முதல் 7.45 மணி வரை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு இரவு தரிசனம் கிடையாது. இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை, ஏகாந்த தீபாராதனை, 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்த தகவலை குமரி மாவட்ட கோவில்களின் இனை ஆணையர் அன்புமணி, பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சுப்ரபாத தரிசனம் நடைபெறும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. 6.30 மணி முதல் 7.45 மணி வரை தரிசனம் செய்யலாம். 7.45 மணி முதல் 9.30 மணி வரை தோமாலை பூஜை நடைபெறும். அதில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. 9.30 முதல் 11.45 மணி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். 11.45 மணி முதல் 12.30 மணி வரை பூஜை, தொடர்ந்து 12.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு 2 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு இரவில் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஏகாந்த சேவை பூஜை நடைபெறும்.

இந்த தகவலை கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com