கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக இன்று கல்லறை திருநாள் கடைபிடிப்பு

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சகல ஆன்மாக்கள் நினைவு (கல்லறை திருநாள்) நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
கல்லறை திருநாள்
கல்லறை திருநாள்
Published on

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியான இன்று சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று கல்லறை தோட்டங்களில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

வழக்கம்போல இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் மற்றும் செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு, சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள்.

கல்லறை தோட்டங்களுக்கு அன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்துவதால், அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாலையில் பங்கு தந்தையர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்திரிப்பார்கள். மேலும் காலை மற்றும் மாலையில் ஆலயங்களில் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக திருப்பலி நடைபெறும்.

இது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கல்லறை தோட்டங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் பங்கு தந்தைகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்களது முன்னோரின் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைகளில் அஞ்சலி செலுத்துவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com