வாளால் மிரட்டியவரையும் மன்னித்தருளிய எம்பெருமானார் நபி(ஸல்)

நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.
வாளால் மிரட்டியவரையும் மன்னித்தருளிய எம்பெருமானார் நபி(ஸல்)
Published on

நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் அவர்களது தோழர்கள் மதீனாவிற்குத் திரும்பிய சில வாரங்களில் அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் என்ற கிளையினர் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குச் செய்தி வந்தது.

துரிதமாக நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டு 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்து அப்போருக்காகப் புறப்பட்டனர். ஓர் ஒட்டகத்தில் மாறி மாறி சவாரி செய்ததால் அதிகம் நடக்க வேண்டி இருந்ததால் கால்களில் நபியின் தோழர்களுக்கு வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் பெயர்ந்து துண்டுத் துணிகளைக் கொண்டு கால்களில் சுற்றிக் கொண்டு நடந்தனர். அதனாலேயே இந்தப் போருக்கு ‘தாதுர் கா’ அதாவது துண்டுத் துணிகள் உடையது என்ற பெயர் வந்தது.

போகும் வழியில் ஒரு நிழல் தரும் மரத்தின் கீழ் நபி(ஸல்) ஓய்வு எடுக்கும்போது கண் அயர்ந்துவிட்டார்கள். நபித் தோழர்கள் வெவ்வேறு மர நிழலில் கண் அயந்தனர். நபிகளாரின் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டிருந்தார்கள்.

நபி(ஸல்) கண் அயர்ந்த நேரம் பார்த்து ஓர் இறை நிராகரிப்பாளரான கிராமவாசி அவ்வாளை உருவி நபி(ஸல்) முன்பு நிற்க, கண் விழித்துப் பார்த்த நபி(ஸல்) அவர்களை நோக்கி அந்தக் கிராமவாசி “நீ எனக்குப் பயப்படுகிறாயா?” என்று கேட்டார். நபி(ஸல்) நெஞ்சை நிமிர்த்தியவர்களாக “இல்லை” என்றார்கள். அவரோ, ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்க, நபி(ஸல்) கொஞ்சமும் தயங்காமல் “அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டதும் அந்தக் கிராமவாசி கை நடுங்கி வாளை நழுவ விட்டார்.

அதன்பின் நபித் தோழர்கள் அங்கு சூழ்ந்ததும், நபி(ஸல்) நடந்தவற்றைச் சொன்னார்கள். கிராமவாசி ஒன்றுமே அறியாதவர் தோரணையில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார். நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி 4:64:4135

-ஜெஸிலா பானு.

X

Maalai Malar
www.maalaimalar.com