

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் நேற்று காலை முதல் படிப்படியாக அதிகரித்தது.
பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுந்தம் தங்கும் அறைகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியது.
காத்திருப்பு அறைகளுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடும் வெயில் கொளுத்துவதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர். தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் நேற்று 80,350 பேர் தரிசனம் செய்தனர். 36,597 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.