புரட்டாசி பவுர்ணமி அம்பிகை

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம். இதை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி பவுர்ணமி அம்பிகை
Published on

புரட்டாசி மாதத்தில் அன்னை, நவராத்திரியில் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்து அதனால் எழுந்த கோபத்தினால் உக்கிரமாக இருந்தாள்.

பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றி துதித்ததன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக காட்சி அளித்தாள்.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறுவார்கள்.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.

இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.

நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.

இந்த கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லகரியில் அம்பிகையின் சவுந்தரியத்தை "உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.

உன் முகமாகிய சந்திரனிடம் இருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக்கதிர்களை உண்ணும் சகோரப் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.

ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கை புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன" என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமயத்தில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளை பெறுவார்கள்.

பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும்.

இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

இந்த சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.

இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல தேஜசும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.

இவர்களோ அல்லது இவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.

எதிரிகள் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com