வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன்  சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
Published on

ஆண்டுக்கு ஒரு தடவை இறைவன், இறைவிக்கு நடத்தப்படும் திருக்கல்யாணம், ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.

சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும்.

அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.

இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள்.

மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.

இத்தகைய திருமணங்களை நடத்த ஊருக்கு ஊர் பழக்க & வழக்கம் வித்தியாசமாக இருக்கும்.

அந்த வகையில் பழமை மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய அர்ச்சகர்களே ஆண் & பெண் வேடமிட்டு திருக்கல்யாணத்தை நடத்துவார்கள்.

இந்த சேவைக்காகவே இக்கோவிலில் இரண்டு விதமான அர்ச்சக பரம்பரையினர் காலம், காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

குலசேகர பட்டர் பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மாப்பிள்ளை வேடம் ஏற்பார்.

உக்கிரப்பாண்டி பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மணமகள் வேடம் ஏற்பார். அவர்களை இறைவன், இறைவியாகக் கருதி திருக்கல்யாணம் நடத்தப்படும்.

விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.

அதன்பிறகு திருக்கல்யாணத்தின் முக்கியச் சடங்கான மங்கல நான் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இறைவிக்கு திருமாங்கல்யம் கட்டப்படும் போது, பெண்கள் தாங்களும் தங்களுக்கு திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் போது திருமால் கன்னிகாதானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன், மீனாட்சியம்மையை மணக்கிறார்.

திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. அதை மதுரை தலத்தில் சிறப்புற காணலாம்.

இந்த திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் இறைவன், இறைவிக்கு பட்டுப்புடவைகள் திருமாங்கல்யம் மற்றும் மொய்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

கோவில் சார்பாக திருமாங்கல்யம், மஞ்சள் கிழங்கு, விபூதி, குங்குமம் கொண்ட பிரசாத பையை பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.

தனி நபர்களும் வேண்டுதலின் பேரில், பக்தர்களுக்கு மாங்கல்யப் பிரசாதம் கொடுப்பார்கள்.

இறைவன், இறைவிக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்பவர்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com