மருதமலை-20

மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.
மருதமலை-20
Published on

1. மருதமலை-கோவை நகரத்திற்கு வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

இதைச்சுற்றிலும் காடுகளே அமைந்துள்ளது.

2. கொங்கு மண்டலம் ஆதிகாலத்தில் இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அதில் கொங்கு நாட்டில் ஒரு கூறாகிய ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது.

3. மருதமலை மிகப் பழம்பெருமையுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்களும், கல்வெட்டுக்கள், புராணங்கள் ஆகியவையும் சான்றாக உள்ளது.

4. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மருதமலையான், மருதாசலம், மருதன் போன்ற பெயர்கள் கோவை மாவட்டத்தில் அதிலும் மருதமலை அமைந்துள்ள அடிவாரப்பகுதி நாடாகிய ஆறை நாட்டில் வழங்கி வந்திருக்கிறது.

5. கச்சியப்ப முனிவரால் கூறப்பட்ட மருதமலைக்கும் இன்றைக்கு நாம் பார்க்கும் மருதமலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

அதனுடைய வளமும் உயர்வும் இன்று சிதைந்து விட்டது.

6. விஷ்ணு முதல் இந்திராதி தேவர்களும் ஒரு காலத்திலே மருதமலைக்கு வந்து முருகனிடம் வரம் வேண்டி காத்திருந்தார்கள் என்பதற்கான கதையும் புராணச்சான்றும் இருக்கிறது.

7. தவயோகிகளும், ஞானிகளும், தவத்திற்காகவும்-சாகாத ஜீவ சக்தி பெற்ற கல்ப மூலிகைகளுக்காகவும் மருதமலையில் வந்து தங்கியிருந்தனர்.

8. காமதேனு வந்து உலாவி பசியாற மேய்ந்து மருத மரத்து அடியிலே இருந்து மருத தீர்த்தம் பருகியிருக்கிறது.

9. மருதமலை பல்வேறு தீர்த்த மகிமை கொண்டது. மருத தீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், கந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவைகள் மருதமலையிலே இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறது.

10. சரவணப்பொய்கையென்பது மருதமலை முருகன் சந்நிதியில் நேர் மேற்கு இரண்டு மைல் தூரம் நடந்தால் இன்றும் இருக்கிறது.

11. அனுமன் தீர்த்தம் என்பது முருகப் பெருமான் கோவிலில் இருந்து வடமேற்கே மூன்று மைல் தூரம் சென்று உச்சிப் பிள்ளையார் கோவிலின் கீழ் சரிவில் உள்ளது.

12. மருதமலையில் தீர்த்தங்கள் மட்டுமின்றி ஆங்காங்கே நிறைய ஊற்றுகளும் இருந்திருக்கின்றன.

இப்பொழுது இருக்கிற இடும்பன் கோவிலின் நேர் தெற்கே வக்கன் ஊற்று ஒன்று இருந்திருக்கிறது.

இன்னும் பெயர் தெரியாத ஊற்றுக்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

13. மருதமலையில் சாகாத மூலிகைகளும் கல்ப விருட்சங்களும் வளர்ந்து சஞ்சீவிகளின் காற்றுப் பட்டு அதில் உள்ள தீர்த்தங்களும் அமிர்தம் பொருந்தியதாகவும், உடல் பிணி மனப் பிணி கர்மப்பிணி இவைகளைத் தீர்ப்பதாகவும் இருந்தது.

14. இரவிலே மின்னலெனப் பிரகாசித்து இரவை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்த ஜோதி விருட்சங்களும் அடர்ந்த இருளிளே பொன்னிறமாக ஒளிரும் ஜோதிப்புற்களும், நாகநந்தா, நாகதாளி போன்றவைகளும் மருதமலையில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்து கிடந்தன.

நாகதாளியின் கனிகள் பாம்புபோல படமெடுத்த வண்ணம் காய்த்து, கனிந்து நீண்டிருப்பதைக்கண்டு மயிலினங்கள் நாகப்பாம்புக் குட்டிகள் படமெடுத்து நிற்கிற தென்று நினைத்து ஓடிவந்து கொத்துமாம்.

15. மருதமலை ஒரு மருந்து மலையாக இருந்தது என்றும் சில கதைகள் உண்டு.

உடல் நோயைத் தீர்ப்பதற்கான தீர்த்த வளமும், மூலிகை வளமும் தன்னகத்தே கொண்டிருந்தது.

16. மருதமலை தல விருட்சமான மருத மரத்தின் அடியிலே ஊற்றெடுக்கும் தீர்த்தத்திற்கு உடல் பிணி தீர்க்கும் சக்தியும் இதில் மூழ்கி எழுவோருக்கு உடல் சோர்வு நீங்கி சித்த சுத்தியும், நினைத்த காரியங்களை சித்திக்க வைக்கும் சக்தியும் இருந்ததால் மருத தீர்த்தம் மருதாசலம் மருதாசல மூர்த்தி என்றெல்லாம் பெயர் பெற்றது.

17. மருதமலையில் பல இடங்களில் சோலைகள் உள்ளன. இங்கு குறிஞ்சி செடிகளும், சிறியா நங்கை, பெரியா நங்கை செடிகளும், ஊதுபாலை, நத்தைச் சூரி, முப்பிரண்டை, கல் தாமரை போன்ற அற்புத மூலிகைகளை இன்றும் காணலாம்.

18. மருதமலை மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளை தரிசிக்க எண்ணூற்று முப்பத்தேழு படிகளை நாம் கடந்து செல்ல வேண்டும்.

19. முருக தரிசனத்திற்காக நாம் பஸ்சை விட்டு இறங்கியதும் நேரே முருகனின் சந்நிதிக்குச் செல்லும் முன் வள்ளியம்மன் திண்டு என்கிற வள்ளியம்மன் ஆலயத்திற்குச் சென்று முருகனுடைய நாயகியான வள்ளியம்மனை வழிபட்டு செல்ல வேண்டியது அவசியம்.

20. பாம்பட்டிச் சித்தர் என்பவர் சித்தர்களில் முக்கியமானவர்.

மருதமலை வளமும் பெயரும் நிலைக்க இவர் சமாதி கொண்டது ஒரு காரணமாகும்.

இவர் சன்னதிக்கு இன்றும் நாள்தோறும் ஒரு பெரும் வயது முதிர்ந்த பாம்பு வந்து பாலும் பழமும் சாப்பிட்டு செல்கிறது.

இக்கோவிலை வழிபடுபவர்கள் சித்தசுத்தி மன அமைதி எதிலும் பூரணத்துவம் பெறுகின்றனர்.

பில்லி சூனியம், ஏவல் இவைகளால் கவலைப் படுவோர் இவரிடம் முறையிட்டுக் கொண்டால் இவைகளில் இருந்து நிரந்தர விடை காண முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com