திரிபுர சம்ஹாரம்

முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும்.
திரிபுர சம்ஹாரம்
Published on

ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் திருவதிகை தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ நாளில் சிவபெருமான், திரிபுரத்தை எரித்ததை நடத்துகிறார்கள்.

இந்த ஆண்டு முப்புரம் எரித்து, சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அதி காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். பிறகு திரிபுர சம்ஹாரமூர்த்திக்கான திருத்தேர் புறப்படும். ஏராளமானவர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.

அன்றிரவு 7 மணிக்கு திரிபுர சம்ஹாரமூர்த்தியை அலங்கரித்து தேரில் எழுந்தருள செய்வார்கள். இதற்கிடையே மேளவாத்தியம் முழுங்க வாணவேடிக்கையோடு சரநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சரம்கொண்டு வரப்படும்.

அந்த சரத்தை பெற்று சிவபெருமான் புன்னகை செய்வார். முப்புரம் அழியும். இதை மக்களுக்காக நேரில் காட்ட 3 அரசுர்கள் போன்று 3 பொம்மைகள் செய்யப்படும்.

அந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திரிபுரசம்ஹார மூர்த்தி கையில் இருந்து செல்லும் அம்பு தாக்கி அழிக்கும். திருச்செந்தூர் தலத்தில் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் போது புகை விட்டபடி பட்டாசு விடப்படும். அது போன்ற இத்தலத்திலும் சம்ஹார மூர்த்தியிடம் இருந்து பட்டாசு சென்று மூன்று அசுரர்களையும் அழிக்கும்.

இந்த முப்புரமெரித்த காட்சியைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம்.

அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

திருநாவுக்கரசரின் குரு பூஜை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும். திருவதிகை தலத்தில் திருநாவுக்கரசருக்கான பூஜை மிக,மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சதயம் நட்சத்திரம் தினத்தன்று திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. மேலும் இத்தலத்தில் திருநாவுக்கரசர் நீண்ட நாட்கள் வாழ்ந்ததால், அவரது வரலாற்றை நினைவு கூறும் வகையில் சித்திரை மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் திருநாவுக்கரசரின் வரலாற்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இந்த 10 நாட்களும் திருநாவுக்கரசரை வழிபட்டால் பெரும் பேறுகள் கிடைக்கும்.

இத்தலத்தில் தான் தெப்ப உற்சவத்தின் போது ஈசனுக்கு பதில் சிவனடியாரான திருநாவுக்கரசர் தெப்பத்தில் சென்று வருவார்கள்.தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இந்த அற்புதத்தை காணமுடியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com