search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நாளை புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
    X

    நாளை புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    • புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை தொடர்ந்து புதுவையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    ஒயிட் டவுன் மற்றும் நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். புத்தாண்டை வரவேற்கும்விதமாக புதுவை கடற்கரை சாலை, நட்சத்திர விடுதிகள், மது பார்கள், ரெஸ்டோபார்கள், கடற்கரை கேளிக்கை இடங்கள் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டை கொண்டாடுவதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாகவே வர தொடங்கிவிட்டனர்.

    இன்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. புதுவையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன. அறைகளில் தங்க வழக்கமான நாட்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவில் புதுவை கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள், விடுதிகள், தேவாலயங்கள் செல்வோருக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மாலை 6 மணிக்கே கடற்கரை சாலைக்கு மக்கள் வருகை தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 150 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். இவற்றின் மூலம் கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக வளாகம், பாரதிதாசன் கல்லூரி, உப்பளம் பெத்தி செமினார் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலைக்கு வர இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி நள்ளிரவு ஒரு மணி வரை அனுமதி பெற்று மது விநியோகம் செய்ய கலால்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே புதுவை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகையால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    இதனால் நாளை நகர பகுதிக்குள் வரவும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வெளியேறவும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை மாலை முதல் இரவு வரை கடற்கரை சாலைக்கு பகுதி, பகுதியாக புத்தாண்டை கொண்டாட ஏராளமானோர் வருவார்கள்.

    அதே வேளையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 12 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள். இதனால் கடந்த காலங்களில் நள்ளிரவில் நகர பகுதி வாகன நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதனால் இந்த ஆண்டு வாகன நெரிசல் ஏற்படாமல் கலைந்து செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர பகுதியில் நெரிசலை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினார். அப்போது சில ஆலோசனைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் முகம் சுளிக்காமல், கனிவோடு நடந்து கொள்ளும்படியும் போலீசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.

    இதனிடையே உள்ளாட்சித்துறை ஓட்டல் மற்றும் திறந்த வெளியில் நிகழ்ச்சியில் நடத்துவோர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதி பெற்ற எண்ணிக்கையில் மட்டும்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நபர்களை அனுமதிக்க வேண்டும்.

    அவர்களுக்கு உறுதியளித்தபடி மது வகைகள், உணவுகளை வழங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள், முன்னேற்பாடுகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அனுமதியில்லாமல் புத்தாண்டு கொண்டாட வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×