குழந்தை எனக்கு பிறந்ததா? என்று கணவர் சந்தேகப்பட்டதால் மண்ணில் புதைத்து கொன்றேன்- நாடகமாடிய தாய் வாக்குமூலம்

கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
குழந்தை எனக்கு பிறந்ததா? என்று கணவர் சந்தேகப்பட்டதால் மண்ணில் புதைத்து கொன்றேன்- நாடகமாடிய தாய் வாக்குமூலம்
Published on

புதுச்சேரி:

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.

அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.

சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.

இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.

நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com