

புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த கல்வியாண்டிற்கான (2024-25) பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான கியூட் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவு கடந்த 13-ந் தேதி வெளியானது. இதன்படி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.
இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியவில்லை. இணைய தளம் முடங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக உதவி எண்களை தொடர்பு கொண்டால் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.