search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மது விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டு சலுகைகள் அறிவிப்பு-  2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம்
    X

    புதுச்சேரியில் மது விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டு சலுகைகள் அறிவிப்பு- 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம்

    • வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது நுகர்வோர்களாக உள்ளனர்.

    புதுவையின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசின் மதுபான கழகங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் குறிப்பிட்ட சில மது வகைகள் மட்டும்தான் இந்த மாநிலங்களில் கிடைக்கும். ஆனால் புதுவையில் மது வகைகள் மட்டும் 900 வகைகளும், பீரில் 35 வகைகளும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மது, ஒயின், பீர், வோட்கா ஆகியவையும் கிடைக்கிறது.

    இது மதுபான பிரியர்களை கவர்ந்திழுக்கிறது. இதனால் வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுவிற்பனை சூடுபிடிக்கிறது.

    அதேநேரத்தில் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.

    சமீபத்தில் சுற்றுலா பயணிகளை கவர ரெஸ்டோ பார்களை புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்த பார்களும் அவ்வப்போது புதிது, புதிதாக திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மதுக்கடைகளில் கடுமையான வியாபார போட்டி நிலவுகிறது. மாநில எல்லை பகுதிகளில் உள்ள கடைகளில் மது பிரியர்களை கவர 2 பீர் வாங்கினால், ஒரு பீர் இலவசம், ஒரு குவார்ட்டருக்கு முட்டை இலவசம் என பார்களில் உணவு வகைகளுக்கு சலுகைகள் வழங்கி மது பிரியர்களை ஈர்க்கின்றனர்.

    நகர பகுதிகளில் இந்த போட்டி இன்னும் கூடுதலாக உள்ளது. ஏனெனில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே மதுபார் உள்ளது. அறைகளிலும் மதுபானம் விநியோகம் செய்யப்படும். மது பிரியர்களை ஈர்க்க மதுக்கடைகள் முன்பு சலுகை விளம்பரங்களை வைக்கின்றனர். இணைய தளத்திலும் சலுகை விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

    சமீபத்தில் பீர் பிரியர்களை புதுவைக்கு வரவழைக்கும் வகையில் பீர் பஸ் சென்னையிலிருந்து புதுவைக்கு விடப்படும் என அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பீர் பஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக பெண்களுக்கென மதுபார் திறக்கப்பட்டது.

    இதில் பெண்களே மதுவை விநியோகம் செய்வார்கள், சலுகைகள் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஏற்கனவே நாடு முழுவதும் மது வகைகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. இதையும் மீறி புதுவையில் மதுபான கடைகளின் முன்பும், இணைய தளத்திலும் சலுகைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

    இதற்கு புதுவை கலால்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் உள்ள மதுபார்கள், விடுதிகள் விற்பனை தொடர்பான சலுகைகள், பெண்களுக்கு மது இலவசம், பரிசு பொருட்கள் போன்ற சுவரொட்டிகள், பதாகைகள், இணையதளத்தில் விளம்பரங்கள் செய்வதாக தெரிகிறது.

    இது கலால்விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்கள் மதுபான கடைகள், உணவகம், விடுதிகள், சமூகவலைதளங்களில் உள்ள தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×