

புதுச்சேரி:
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், விடுதியில் துறை இயக்குனர் இளங்கோவன் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மக்களின் தேவையை அறிந்து உண்மையாக பணியாற்ற வேண்டும். குறைகள் இருந்தால் தயக்கமின்றி என்னிடம் தெரிவிக்கலாம். விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்த நான், தற்போது அதிகாரியாக உள்ளேன்.
ஒரு எண்ணத்தை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். புதுவை மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி எண்ணுகிறார்.
அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சந்திரபிரியங்கா, ஆதிதிராவிடர் நலத்துறை யில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஐ.ஏ.எஸ். சிறப்பு பயிற்சி இலவசமாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர், அதிகாரிகள், ஊழியர்கள், விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.