

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு மோதல் ஒரு "ஆபத்தான கட்டத்தை" எட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
"ஈரானில் உள்ள நடன்ஸ் செறிவூட்டல் வளாகம் மற்றும் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இஸ்ரேலிய நகரமான டிமோனா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், மத்திய கிழக்கில் போர் ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது," என்று கூறிய டாக்டர் டெட்ரோஸ், போர் தீவிரமடையக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இந்தச் சம்பவங்களை மதிப்பிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், "தளத்திற்கு வெளியே அசாதாரணமான அல்லது அதிகரித்த கதிர்வீச்சு அளவுகள் எதுவும் பதிவாகவில்லை" என்றும் அவர் கூறினார்.
பரந்த அளவிலான அபாயங்கள் குறித்து எச்சரித்த அவர், "அணுசக்தி தளங்களை குறிவைக்கும் தாக்குதல்கள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்குகின்றன" என்று அவர் கூறினார்.