

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதல் 6 வாரமாக நீடித்தது.
கடந்த 7-ம் தேதி இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.
இதையடுத்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழு இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்தனர்.
இதேபோல், ஈரான் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரான் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் வருகை தந்தனர்.
இதற்கிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு புறப்படும் முன், அமெரிக்க துணை அதிபர் வான்சுக்கு டிரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பாகிஸ்தானுக்கு வருகை தந்தார். அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். இதனால் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதி பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள தெருக்களை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 6 வாரமாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.