search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்: ரஷியாவுக்கு ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்
    X

    உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்: ரஷியாவுக்கு ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்

    • கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷியா மறுப்பு
    • உக்ரைனில் இருந்து தானிய பொருட்கள் ஏற்றுமதி ஆவதில சிக்கல்

    உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.

    இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

    கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.

    ரஷியாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை உறுதி செய்ய பிற நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    தற்போது ரஷியாவால் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், எந்த கப்பல் நிறுவனமும் அதனை அலட்சியப்படுத்தி தானிய ஏற்றுமதியில் பங்கேற்காது என தெரிவிக்கும் வல்லுனர்கள், இந்த சிக்கல் உலகின் மிகப்பெரிய உணவு நெருக்கடியாக மாறுவதற்கு முன் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என கருத்து தெரித்தனர்.

    Next Story
    ×