

இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தில் உள்ள கோவோவில் இரண்டு இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, கோவோவில் உள்ள ஒரு தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள குருத்வாரா மாதா சாஹிப் கவுர் ஜி வாசலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
வைசாகி திருவிழா கொண்டாட்டத்திற்காகக் கூடியிருந்த அவர்கள், வழிபாட்டுத் தலத்திலிருந்து வெளியேறியபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் 48 வயதான ரகிந்தர் சிங் மற்றும் 48 வயதான குர்மித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் 10 முறை துப்பாக்கியால் சுட்டபின்னர் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த கொலையை நடத்தியவரும் ஒரு இந்தியர்தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இத்தாலியப் போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.