search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அரசியல் சிக்கலாக மாறி வரும் அகதிகள் பிரச்சனை
    X

    அரசியல் சிக்கலாக மாறி வரும் அகதிகள் பிரச்சனை

    • 2021லிருந்து தற்போது வரை 6.3 மில்லியன் அகதிகள் நுழைந்துள்ளனர்
    • தாக்கிய அகதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்

    தினந்தோறும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக ஆபத்தான நீண்ட பயணங்களை மேற்கொண்டு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.

    2021லிருந்து தற்போது வரை மட்டுமே 6.3 மில்லியன் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறு வரும் அகதிகளால் அமெரிக்காவில் சமீப சில வருடங்களாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியின் மையத்தில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில் ஒரு சிறிய அகதிகள் குடியிருப்பில், கும்பலாக கூடியிருந்த அகதிகள் சிலரை கலைந்து போகுமாறு சில காவல் அதிகாரிகள் கூறினர்.

    அவர்கள் அதற்கு மறுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்ய காவல் அதிகாரிகள் முயன்றனர்.

    அப்பொது அந்த அகதிகளில் சிலர் காவல் அதிகாரிகளை தாக்கினர். இதில் அந்த அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    சுமார் 12 பேர் ஈடுபட்டதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக 6 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பிணையில் விடப்பட்டனர்; ஒருவர் சிறையில் உள்ளார்.

    தாக்குதலில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில் ஏறி தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதால், இரு கட்சிகளை சேர்ந்த வாக்காளர்களில் பலர், கட்சி பேதம் இன்றி சமூக வலைதளங்களில் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    காவல் துறையினர் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் காவல்துறையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தீவிரமாக களம் இறங்கியுள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் "சட்டவிரோத அகதிகள்" பிரச்சனை, வாக்காளர்களை ஈர்க்கும் அம்சமாக மாறி உள்ளது.

    Next Story
    ×